Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil)  04-02-2021

இன்றைய தியானம்(Tamil)  04-02-2021

தைரியமாய் எழும்பு 

“அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு,….” – அப். 2:4

வேல்ஸ் தேசத்திலே இவான் ராபர்ட் என்ற இளம் வாலிபன் ஜெபித்துக் கொண்டிருந்த வேளையில் “வேல்ஸ் தேசத்திற்கு எழுப்புதலை அனுப்பப் போகிறேன். இந்த எழுப்புதல் அக்கினி இங்கிலாந்து, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா வரை பரவும்” என்று தேவன் அவரிடம் கூறினார். இவான் தான் பெற்றுக்கொண்ட வெளிப்பாடுகளை சபையிலே பிரசங்கிக்க ஆவலாயிருந்தார். ஆனால் சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை. கடைசியாக போதகர், “வருகிற வாரம் புதன் கிழமை இரவு ஆராதனையில் பிரசங்கம் செய். யாராவது உட்கார்ந்து கேட்பார்களானால் கேட்கட்டும்” என்றார். செய்தி கேட்ட பாஸ்டரும் மற்ற 17 பேரும் தேவ அக்கினியால் தொடப்பட்டனர். இளம் வாலிபனான இவான்  தேவ வார்த்தைகளை தைரியமாய் பிரசங்கித்தார். இவருடைய எளிமையான செய்தி அநேகரை தொட்டது. எழுப்புதல் அக்கினி வேகமாகப் பரவத் தொடங்கியது. அடுத்த 30 நாட்களில் 37,000 மக்கள் மனந்திரும்பி, பாவத்தை அறிக்கையிட்டு, இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்டனர். ஐந்து மாதத்திற்குள் ஒரு லட்சம் பேர் இரட்சிக்கப்பட்டனர். இப்படி அத்தேசம் முழுவதும் எழுப்புதல் அடைந்தது. 

பரிசுத்த வேதாகமத்தில் இயேசு கிறிஸ்து பரத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு தாம் வாக்குப்பண்ணிய பரிசுத்த ஆவியானவரை எருசலேமில் மேல் வீட்டில் காத்திருந்தவர்கள் மேல் பொழிந்தருளினார். அன்று பேதுருவின் பிரசங்கத்தைக் கேட்டு மூவாயிரம் பேர் மனந்திரும்பி, இரட்சிக்கப்பட்டு, சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.  அதிக படிப்பறிவு இல்லாத மீன் பிடிக்கும் பேதுருவின் மூலம் எழுப்புதல் ஏற்பட்டது. மேலும் அப்போஸ்தலர்கள் சென்ற இடம் எல்லாம் அற்புத அடையாளங்களோடு தேவன் தன்னை வெளிப்படுத்தினார். இப்படி அப்போஸ்தலர்கள் காலத்தில் மிகப்பெரிய எழுப்புதல் உண்டானது. 

அன்பானவர்களே! உங்களுக்கும் இந்தியாவின் எழுப்புதலைக் குறித்த வாஞ்சையிருக்கலாம். ஆனாலும் என்னுடைய இருதயத்தில் இவான் ராபர்ட்டைப் போல, ஆதி அப்போஸ்தலர்களைப் போல ஆத்துமாக்களைக் குறித்து பாரம் இல்லையே என ஒருவேளை நீங்கள் அங்கலாய்க்கலாம். தானாகவே நமக்கு இப்படிப்பட்ட பாரம் வருவதில்லை. ஆனால் பரிசுத்த ஆவியானவர் நமக்குள் ஊற்றப்படும்போது இப்படிப்பட்ட பாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்திய எழுப்புதலில் எனது பங்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று துடிப்பு உண்டாகும். தமிழகத்தில் வெறும் 4% மட்டுமே கிறிஸ்தவர்கள். ஆக 100% பேர் இயேசுவை அறிய வேண்டுமென்றால் ஒரு கிறிஸ்தவன் 25 ஆத்துமாக்களை ஆதாயம் செய்ய வேண்டும். இந்த கணக்கைப் பார்த்தால் இது என்னால் முடியுமா? என தோன்றலாம். ஆனால் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட எவராலும் நிச்சயம் முடியும். சாதாரண வாலிபனான இவான், படிக்காத பேதுரு.... என ஆவியானவரால் நிரப்பப்பட்ட இவர்களைக் கொண்டு தேவன் பெரிய காரியங்களை செய்தாரே! நிச்சயம் உங்களைக் கொண்டும் செய்வார். தைரியமாய் எழும்புங்கள். எழுப்புதலில் உங்களுக்கும் பங்கு உண்டு. 
-    P. ஸ்டீவ் மேத்யூ

ஜெபக்குறிப்பு:
நம்மோடு இணைந்து செயல்படும் தோழமை ஊழியர்களின் பிரயாணங்களில் தேவக்கரம் உடனிருக்க ஜெபியுங்கள். 

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)